Tuesday, October 6, 2015

அகரம் (தென்னேரி) திருப்பதி.

1.
பொன்ஏர் பலவெழுதி இப்பொலன் நல்கொழிக்க
முன்ஏர் உழஉழுது பொன்குவிக்கும் -- தென்னேரித்
தண்பதிக்காய் நின்றானை! தாமரையாள் மார்வனை!
எண்குற்றார்க் கில்லை இடர்.

2.
இல்லை இடர்தான் நமக்கு! இலக்குமி
மல்கி அமர்கோயில்! மன்றதில் -- முல்லை
இருவாட்சி பூமணக்கும் தென்னேரி நின்று
அருளாட்சி செய்மால் அணைந்து.

3.
அணைவாம் அயன்அரன் வான்அம ரர்க்கும்!
துணைதான் திருமால் எவர்க்கும்! -- அணைந்தன்று
ஆனைக் கருள்மால் அணையுமித் தென்னேரி
வானமரும் முந்தையர் வீடு!
4.
வீடு உகந்தருள்மால் விண்ணோர் அவர்தலை!
நாடி மறைநான்கும் தேடி -- முடிக்கலா
தெய்வம் உறைவதூம்தென் ஏரி அகரத்துள்!
செய்குவான்  உய்வதாய் மெய்த்து!
5.
உய்யுமாறு மெய்யில் உணரும் ஒருவனை!
பொய்யர்க்குப் பொய்யனாய்  அற்றதற்றி -- மெய்யர்க்கு
மெய்யனாய் முந்துவான்! தென்னேரி நின்றருள்
பைந்துழாய் பாதத்தான் பற்று!
6.
பற்று எவர்க்குமாய்  முற்றும்  முதல்வனை!
பெற்று அகலுமோ? உற்றதாக் -- கற்றுளார்
நற்றமெய்தி ஆற்றலும் தென்னேரி ஒன்றதுள்
நிற்றமால் நெஞ்சுளே நோற்று!
7.
நோற்று நடமினோ மாலொருவன் பொன்னடிக்காய்!
ஏற்ற மதுவே நமனோர்க்கு! -- போற்றிப்
புகலும் புனிதனை! தென்னேரி யுள்போந்
தகலும் இனிஓர்  பிறப்பு!
8.
பிறவி முடித்து தொடரும் அடிக்காய் !
முறைமை அவன்பால் ஒழுகல் -- அறிவு!
எழிலார் திருமாலை தென்னேரி சேரத்
தொழுவார் விழைவரோ வீடு?
9.
வீடுமின் காயம் வினைவாய் முடித்து!
வீடுசெய் மாயன் மருவிஅணை -- வீடது
நாடலே நல்லறம்! தென்னேரி ஒன்றதுள்
தேடியாள் தெய்வத் தரசு!
10.
அரசும் அமரர்தம் வாழ்வும் இசைய
விரசுவான் போகம்யான் வேண்டேன்! -- அரிசினத்தன் 
ஆய்நீ  அகற்றிடினும் மீளேன் அடிக்கலால் !
தீயில் புடம்போட்ட பொன்!

--(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ  ரங்கன் ஸ்ரீநிவாஸ  தாஸன்.

No comments:

Post a Comment