Friday, October 30, 2015

பஞ்ச தசோத்பவேத் தேவம், நாராயணம்.

வராஹாவதாரம் .

பிரமன் உலகு படைத்தற்காய் நேர
பெருவெள்ளம் பார்ஒளித்து  நீரின் -- இருப்பமால்
கோல வராகமாய் கோட்டிடை மீக்கொணர்ந்தான்!
ஞாலத் துயிர்நடையல் என்று!
 
கபிலாவதாரம்.

சாக்கிய யோக நெறிதந்து  தாய்க்குத்தாம்
ஆக்கிய  யாவும் அருள்குருவாய் -- வாக்கில்
உயர்முனி கீழுலகம் காக்கும் கபிலமுனி
தூயநெறி தந்தமால் ஓம்பு!

மத்ச்யாவதாரம்.

சத்ய விரதன் வியப்ப உலப்பிலா
சக்தி பெருகி கடல்சேர் -- உத்திசெய்மால்
மீன்எனப் போந்தனாய் ஊழிபுக ஓடமதை 
தான்நல்கி காக்கும் உலகு!


கஜேந்திர மோக்ஷம். 

பூக்கொய்து கூவி களிறு அழைப்பஅக்
கூக்குரல் கேட்டலும் தண்ணளி -- மீக்கொடு
ஓர்பறவை ஊர்ந்துவண் சக்கரக் கையான்!அன்
நீர்புழுவை மாய்பனே பாய்ந்து!

தத்தாத்ரேயர் அவதாரம் :

மறைநான்கும் நாயென மேவ மிளிர்கைகள்
ஆறும் வலம்புரி சங்காழி -- நேறும்!
உடுக்கையோடு சூலம் கமண்டலு மாலா
பிடித்தவதூ  தர்கீதை ஓது!

நர-நாராயணாவதாரம் 

எட்டெழுத்து மந்திரம்! பிறப்பறுத்துத் தந்திடும்!!
ஒற்றைச்சொல் ''ஓம்''இதன் கூற்றதாம் -- மற்றைசொல்!
நாரணன் தாமே குருவும்நல் சீடனாய்த்
தேர்ந்த வதரிமேல் வாக்கு!

ஹயக்கிரீவாவதாரம்.

செல்செல்வம் போலா கதேகல்வி! அக்கல்வி
அல்லா தவர்க்குநல்கி நீடுசெய்வான்! -- எல்லையில்
தொல்சீர் பரிமுகத்து ஞானப் பிரானவனே!
கல்லாதவ ராக்கும் கவி.

மோஹினி அவதாரம்.

அஞ்சிப் பிழைப்பராம் தேவரவர் வாணாளை 
விஞ்ச வளர்ப்பான் கடைந்திட்ட -- அஞ்சுவை
ஆரமுதை ஆங்கு அசுரர்க் களவிடாதே
நேர்ந்திட்டான் பெண்ணுருக் கொண்டு!

 ஹம்சாவதாரம்.

பொய்யா  மறைவிரித்தான் ஆதி சதுமுகற்கு
உய்ய உலகு படைத்தற்காய் -- ஐயன்மால்!
அம்சிறகாள் அன்னமதாய் ஆற்றும் அவதாரம்
தம்சிறந்த நீர்மையுள் நின்று !

வியாஸாவதாரம்.

மறைநான்கும் முன்பின் எனவகுத்தான்! பன்னி
உரைத்தற்காய் பாரதம் கைசெய்து -- பாரில்
நெறிசெய் புராணம் அறுமூன்றும் ஈந்தமாலாய்த் 
தேறும் வியாசர் வணங்கு!

புத்தாவதாரம்.

விரிசடை வானவர்  ஈசன் திரிபுரம்
போரிடை புக்கு சிரிப்பான் -- எரித்த
புகழதும் மால்கள்ள வேடம் கொடுபுத்தன்
மோகமெழு வித்த விளைவு!

அர்தநாரீஸ்வரன்.

தேவர்ப் பெரியமால் தோளில் வலம்கோவில்
மேவு திருவும் அக்கொப்பூழ் -- பூவில்
அணையும் அயனும் இடபால் உமையாள்
துணையும் திகழ்திருமால் மிக்கு! 

ஸு கமுகா தம்ருதம் ஸ்வயம்.

வியாசர் பணித்தநல் பாகவதத் தாள்வேன் 
புயல்நிற வண்ணன்நம் கண்ணன் -- முயலுமெனக் 
கூறி  விடைகொண்டான் தன்னுடைச் சோதி! 
அறிவார்க் கதுஅவன் கோ  யில்!

ஆழ்வாராக  அவதாரம்.

காரி உடையநங்கை கோறித ஓர்வரம் 
பாரில் தமக்கு மகனொருவன் --தாருமென 
ஓவ ''பெரியன் '' எனவாய் அவாவியே 
மேவினான் ஆதிநாதன் தான்! 

இளையாழ்வாராக  அவதாரம்.

தாமெல்லை என்றிருந்த பார்மன்னர்  வீழ்ந்தவிய 
மேனெல்லை  பாரதத்தை ஆள்வித்தான்! -- தாளெல்லை 
என்று  தவத்தால்தம் மொப்பதோர் சேய்வேண்டத் 
தோன்றும் இளையாழ்வார் என்று!


--கி. ஸ்ரீர. ஸ்ரீ.

No comments:

Post a Comment