Thursday, July 16, 2015

நிருஸிம்ம ஸ்தோத்ரம் .

Photos Courtesy : Kesavabhasyam Vn.
 
நச்சு நாரணனை அச்சுதனை!
இச்சகத்து இணைஇலானை !
மெச்ச மகிழ்வானை என் மாலவனை !
எச்சில்வாய்க்  கொண்டு ஏத்தினேனே!.  -1

கற்ற கல்வி இற்றெனப் பற்றி
உற்ற போது உரப்ப உணர்த்தலும்
நிற்ற தூண் பிளந்த இரணியன்
முற்றும் வகைச் செற்ற வென்னப்பனே!   -2
https://scontent.fphx1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11665571_1045548605457107_6777329204581848014_n.jpg?oh=4639e5b5161a3ac50f1a05bf4502882a&oe=564D83D0
நாழிகை இதுவது என்றிலாது
வாழும் வகை வரம் வேண்டி
ஆழியானைப் பழிகொள விழைவானை
போழ்த்தானை பொழுதும் புலற்றுவனே.  -3.

நாராயணா ! என்ற நின்நாமம் ஓத
யாரானும் தடிந்து தண்டிப்பரோ ? அஃதால்
நேராதன செய்தான் என்மகன்  எனவே 
ஓராதவனை ஓய்த்தானை நாளும் ஒழுகு.  -4.




கல்லெனச் சமைந்தானைக்  காணல் திறமோ ?
சொல்லில் சுருதியுள் சொல்லப் படுமவனை 
இல்லை எனஇயற்றுவார் இருளடங்க முன்பு நீ
கல்லினில் தோற்றவும் ஆற்றுமோ பிணக்கினி ?  -5

கானிடைக் கல்லதன் எறிந்தும், கைமா
ஆனுடைக் காலதால் இடர்ந்தும், ஆய்ந்த
கனலிடைக் காய்ப்பவும்,நாளும்  நாமம்
 நினதுடைப் பிள்ளையை பிள்ளை எனலாமே?   -6

கள்ள உள்ளத்து இரணியனைக் காய
வெள்ள வெள்ளத்து அரிதுயில் அகன்றனை!
எள்ளித் தள்ள  வந்தானை தம்பத்தும்
துள்ளி அள்ளம் செய்து அட்டனை அரியே!.  -7




நின்ற நெடுந்தூண் நில்லா துதிர
மன்றில் மார்தட்டித்  தூண் தொட்ட
ஞான்று, இரணியன் உளம் தொட்டுக்
கன்றிய கைக்கபயம் அவன்கால் பணிவார்க்கே!.  -8

பிள்ளைவாய்  அமுதத்தேறல் நின்நாமம் விடமென்றான  
உள்ளம்தொட்டு இரணியன் உயிரை உண்டாய் !
கள்ளமுன் செய்கை! காயுமுன்நாமம் நோயதாமோ?
தெள்ளியசிங்கா ! தெளிகிற்கேன் தண்டனையும் அருளதாலோ?   -9


அல்லில்கேணிக் கண்ணனை !  ஆழி கொண்டு 
துல்லியம் போதில் துரகம் துளைத்தானை!
வில்லின் வலவன் ராமனை! நாகசயனைச்
சொல்லும் போதும் நரசிங்கா! என்பேனே.  -10


-- தாசரதி தாஸன்,
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.








No comments:

Post a Comment